தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 'வீ தி லீடர்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'தமிழகத்தில் 10 முதல் 75 வயதுக்குட்பட்டோரில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுவில் இருந்து என்னை மீட்டெடுங்கள் என்று உதவி தேடும் நபர்களின் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது அமைப்பில் உள்ள 19 லட்சம் உறுப்பினர்களும் ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். 'மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்; போதை இல்லாத தமிழகம் உருவாகட்டும்' என்ற முழக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை மாதத்தின் ஒவ்வொரு வாரமும் தனித்தனி இலக்குகளுடன் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். முதல் வாரத்தில், குடும்பத்தினரிடம் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இரண்டாம் வாரத்தில், வசிக்கும் பகுதிகளில் சிறு குழுக்களாகப் பிரிந்து 100 பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மூன்றாம் வாரத்தில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மாரத்தான், யோகா போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இறுதியாக, இறுதி வாரத்தில் ஒரு மிகப்பெரிய சமூக இயக்கமாக இதை முன்னெடுத்து, உறுதிமொழி எடுக்க வேண்டும்.
மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜூலை 12ஆம் தேதி பொள்ளாச்சியிலும், ஜூலை 26ஆம் தேதி திருச்செந்தூரிலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டங்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.