மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை என்றும், இது ஒன்றிய அரசின் தந்திரமான அறிவிப்பு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சில ஊடகங்களில் வெளியான செய்திகள், ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியுள்ள மும்மொழித் திட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால், சிபிஎஸ்இ அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால், தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் சிபிஎஸ்இ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு அயல் மொழிகளைப் பயிலும் மாணவர்கள், 2026-27 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சிறப்புத் தளர்வாக, அந்த இரண்டு அயல் மொழிகளையும் தொடர்ந்து பயிலலாம். அத்துடன் மூன்றாவது மொழியாக ஒரு 'பாரதிய பாஷா'வை கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றாவது மொழிக்கு, மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது தேர்வு கிடையாது. இது பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும்.
மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, முன்பு அறிவித்தவாறு ஆங்கிலம் அல்லாமல் இரண்டு இந்திய மொழிகள் கற்பிக்கப்படும். அதாவது இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம். மூன்று மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்களை அமர்த்துவதால் செலவு அதிகரிக்குமே என்ற பள்ளி நிர்வாகத்தினரின் கவலையையும் சிபிஎஸ்இ போக்கியுள்ளது. நெகிழ்வான பணியாளர் நியமன ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள், தற்போதுள்ள ஆசிரியர்களையோ, ஓய்வுபெற்ற ஆசிரியர்களையோ, முதுகலைப் பட்டதாரிகளையோ பணியமர்த்தலாம் அல்லது அருகிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களைப் பயன்படுத்தும் முறையைக் கடைபிடிக்கலாம். இணையவழியிலோ, நேரடியாகவோ கற்பிக்கும் கலப்பு முறையையும் பயன்படுத்தலாம்.
மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.