அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து எஸ்பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு மட்டும் பதவி ஏற்பது நியாயமில்லை என்றும், தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, 'என்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு வழங்கப்பட்ட துணை பொது செயலாளர் பதவியை ஏற்க மாட்டேன். தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர்கள் கட்சியில் அந்தந்த மாவட்டத்தின் ஜாம்பவான்கள். என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களை விட்டுவிட்டு நான் பதவி வாங்குவதற்கு தயாராக இல்லை. நான் மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா? எனக்கு பதவி ஆசை இல்லை' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எஸ்பி வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த பதவியை ஏற்க அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது, மாவட்ட செயலாளர்களின் நலனை முதன்மையாக கருதி, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே தனது பதவியை ஏற்பேன் என எஸ்பி வேலுமணி கூறியுள்ளது, அதிமுகவில் மேலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.