தமிழகத்தில் த.வெ.க அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 500 புதிய பேருந்துகள் மற்றும் 300 'ஏசி' மினி பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 60,000 புதிய டயர்கள் வாங்குவதற்கான மெகா டெண்டரும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் தடையின்றி இயங்குவதற்குத் தேவையான டயர், கியர் பாக்ஸ் போன்ற உதிரிபாகங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதில், டயர்களின் தேவை மட்டும் மாதந்தோறும் சுமார் 8,000 ஆக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம் ஆறு மாதங்களுக்குத் தேவையான 60,000 டயர்களை வாங்குவதற்காக டெண்டர் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய த.வெ.க அரசு இந்த டெண்டரை ரத்து செய்துள்ளது. இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பேருந்துகளைத் தடையின்றி இயக்குவதற்குத் தேவையான டயர்கள் தற்போது போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய டெண்டர் வெளியிடப்பட்டு, கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் கூடிய டயர்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தனர்.