தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக அரக்கோணம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அரக்கோணத்தில் செயல்பட்டு வந்த மூன்று மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்தை நகராட்சி பெற்றுள்ளது.
அரக்கோணம் நகராட்சியில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதை அடுத்து, தமிழக அரசுக்கும், அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அரக்கோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் நான்கு மதுக்கடைகள் இயங்கி வந்தன. இந்த மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகவும், குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் தினமும் மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. இதனால், மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி அரக்கோணம் மக்கள் பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு, தவெக ஆட்சி அமைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், அரக்கோணத்தில் இருந்த மூன்று மதுக்கடைகள் சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று மீதமிருந்த கடைசி மதுக்கடையும் மூடப்பட்டுவிட்டது. இதன் மூலம், அரக்கோணம் தற்போது மது இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது. புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் அருகே பஜார் தெரு மற்றும் பழனிபேட்டை ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.