காங்கிரஸ் கட்சியை யாரேனும் தொட்டால், அது திமுக, அதிமுக, பாமக என யாராக இருந்தாலும் சரி, திருப்பி அடிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
தனது அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணம் என்றும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள கூட்டணியில் ஆட்சியில் பங்கேற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மக்களுக்கான பணிகளைத் தொடரவும் முழுமையாக உறுதியுடன் உழைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் மாணிக்கம் தாகூர் விளக்கினார். திமுகவினர் அமைதியாக இருந்தால், காங்கிரஸும் தங்கள் பணியைத் தொடரும் என்றும், ஆனால் தங்களை 'துரோகி' என்றோ அல்லது நக்கல் செய்தாலோ கடுமையான பதில் தாக்குதல் இருக்கும் என்றும் அவர் அழுத்தமாக கூறினார்.
2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றும், இதில் அன்புமணி ராமதாஸ் ஏன் ராகுல் காந்தியை இழுக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அன்புமணி அல்லது சீமான் யாராக இருந்தாலும் ராகுல் காந்தியைப் பற்றி தவறாகப் பேசினால் திருப்பி அடிக்கப்படும் என்றும் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடினார். செல்வப்பெருந்தகை தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியதால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.