திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தின் இரும்பு கிரில் கேட்டை உடனடியாக திறக்க வேண்டும் என திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். இங்கு திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக, தென் மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி, விளைபொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் போன்றவற்றை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். மேலும், ஏராளமான திருமணங்களும் இங்கு நடைபெறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் தற்போது இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் கடவுளான முருகப்பெருமானை விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும், உள்ளூர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த வாய்ப்பு இந்த இரும்பு கேட்டால் தடுக்கப்படுகிறது. எனவே, இந்த இரும்பு கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உள்துறை அருகில் உள்ள கேட்டை பலப்படுத்த வேண்டும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் ஒதுக்கி, அடையாள அட்டை அல்லது ஆதார் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
பக்தர்களின் இந்த கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறையும், திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பக்தர்களின் கோரிக்கைக்காக அவர்களுடன் இணைந்து எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும்' என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.