தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, 'அரசு வேலையை விலை பேசுகிறதா ஜோசப் விஜய் அரசு?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளியாகியுள்ள செய்திகளின்படி, தகுதித் தேர்வில் சிலரின் மதிப்பெண்களில் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும், முதற்கட்ட தேர்வு முடிவுகளின்படி பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றவருக்கு பின்னர் 15 என மதிப்பெண்கள் திருத்தம் செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிலரின் மதிப்பெண்கள் மட்டும் வேறு நிறங்களில் 'நோட்' செய்யப்பட்டிருப்பது, மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாகத் தெரிவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மக்களின் உழைப்பை சுரண்டுவதில் பெயர்போன காங்கிரஸாரின் கைவசம் உள்ள இத்துறையில், இத்தகைய குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதை எளிதாக கடந்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழலுக்கு எதிரானவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் முதல்வர் திரு. விஜய் அவர்கள், அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் நடக்கும் குழப்பங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு வேலையை நம்பி காத்திருக்கும் தகுதியுள்ள பட்டதாரிகளின் கனவுகள் நனவாகும் வகையில், நியாயமான முறையில் நியமனங்கள் நடைபெறுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குளறுபடிகள் குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.