கோழிக்கோடு அருகே பந்தீரங்காவு சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற காரை தடுக்க முயன்ற டோல்கேட் ஊழியர், காரின் பானட்டில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்போது, முன்னால் சென்ற காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த கார் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்பதை அறிந்த டோல்கேட் ஊழியர் மேத்தல் ஜிதேஷி, காரை மறிக்க முயன்றார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதால், ஜிதேஷி காரின் பானட்டில் சிக்கிக் கொண்டார். அவருடன் காரை துரத்திச் சென்ற சக ஊழியர்கள், காரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.
பின்னர், காரில் வந்தவர்களுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், காரின் பானட்டை சேதப்படுத்த முயன்றதாகக் கூறி ஜிதேஷியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கார் சேதப்படுத்தப்பட்டதாக காரில் வந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், ஊழியரை தாக்கி காயப்படுத்தியதாக சுங்கச்சாவடி நிர்வாகமும் புகார் கொடுத்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த டோல்கேட் ஊழியர் ஜிதேஷி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.