கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் காரணங்களைக் கூறி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்தது. TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி TNPSC மூலம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த 26.07.2024 அன்று பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில் 195 இடங்கள் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என நிர்ணயிக்கப்பட்டது. இது 2020 முதல் காத்திருந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என 'வீ த லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நிர்வாகக் குளறுபடியால் தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91-ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே 2020 முதல் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு எப்படிப் பொருத்தமானதாக அமையும்? வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள் 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதேபோல, 2013 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம் ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இதேபோன்று வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் மறுப்பது நியாயமல்ல. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, TNPDCL மற்றும் TNPSC நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.