தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திక్ வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி, இந்த திட்டம் 2031 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.7.50 லட்சம் வரை பணமில்லா மருத்துவ உதவியை பெறலாம். மேலும், குறிப்பிட்ட 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மொத்தம் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துடன் 1,535 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் பிரீமியத்தை தமிழக அரசே ஏற்கும்.
சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் (வாழ்க்கைத் துணை உட்பட), தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (டேப்ஸ்) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் பொருந்தும் என்று அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.