ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் முக்கிய ஆட்டத்தில், இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த குரூப் ஏ கடைசி லீக் போட்டி, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முக்கியமான ஆட்டத்திற்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மாவுக்குப் பதிலாக கிராந்தி கௌத் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதான கிராந்தி கௌத் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினாலும் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. இருப்பினும், வங்கதேச அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் நந்தினி சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதில் தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். மறுபுறம், ஆஸ்திரேலிய அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங்கிற்குப் பதிலாக டாப்-ஆர்டர் பேட்டர் ஃபோப் லிட்ச்பீல்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3-வது வரிசையில் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாகூர், கிராந்தி கௌத்.
ஆஸ்திரேலிய அணி: பெத் மூனி (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வோல், ஃபோப் லிட்ச்பீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, சோஃபி மோலினக்ஸ் (கேப்டன்), கிம் கார்த், லூசி ஹாமில்டன்.
இந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைக்க தீப்திக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தீப்தி சர்மா மற்றும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஆகிய இருவரும் தலா 355 சர்வதேச விக்கெட்டுகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் இந்த சாதனையை தீப்தி சமன் செய்திருந்தாலும், கடந்த இரண்டு போட்டிகளில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாகத் திகழும் தீப்தி சர்மா, இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இப்போட்டியில் அவர் புதிய சாதனையைப் படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.