தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள தலைவர் கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை உறுதியாக இருந்தார். ஆனால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கேற்ப தவெக-வுடன் கூட்டணி அமைக்க ஆதரவாகச் செயல்பட்டனர். தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, காங்கிரஸ் உடனடியாக தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து, இரண்டு அமைச்சர் பதவிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றது.
இந்த திடீர் கூட்டணி மாற்றத்தால், திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த செல்வப்பெருந்தகை கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற செல்வப்பெருந்தகையின் மகள் திருமணத்திற்கு காங்கிரஸ் டெல்லி தலைவர்கள் யாரும் வரவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். இது செல்வப்பெருந்தகையின் கட்சி நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த செல்வப்பெருந்தகை, தன்னை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் அளித்தார். இந்நிலையில், மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.