அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் வீரர் அஸ்வின், வைபவ் சூர்யவன்ஷி தண்ணீர் எடுத்து வரும் வேலை செய்யட்டும், அதில் தவறில்லை எனக் கூறியுள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ததும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.
இது குறித்துப் பேசிய அஸ்வின், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க வீரர்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சஞ்சு உலகக்கோப்பையிலும் நன்றாக விளையாடியதாகவும் தெரிவித்தார். இவர்களில் ஒருவரை வெளியே உட்கார வைத்துவிட்டு வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்தால், அது குழு விளையாட்டிற்கு எதிரானது என்றும், சிறப்பாக விளையாடிய வீரர்களை நமது சூழ்நிலைக்காகக் குறை சொல்லக் கூடாது என்றும் அவர் கூறினார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி மைதானத்திற்குள் தண்ணீர் கொண்டு வந்தது குறித்து பேசிய அஸ்வின், அவர் வெளியே அமர்ந்து போட்டியைப் பார்ப்பதில் தவறில்லை என்றும், இதன் மூலம் அவர் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஒரு சிறந்த வீரர் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை என்றும், வெளியே அமர்ந்து காத்திருப்பது வைபவ் சூர்யவன்ஷியை மேலும் வலுவாக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார். சச்சின் டெண்டுல்கருக்கு நடந்தது போல, வைபவ் சூர்யவன்ஷி ஒருமுறை விளையாடத் தொடங்கினால் அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக மாறக்கூடும், ஆனால் அதற்கு முன்பு காத்திருக்கப் பழக வேண்டும் என்றும் அஸ்வின் தெரிவித்தார்.