பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, அயர்லாந்திடம் முதன்முறையாகத் தோற்றது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் மற்றும் பயிற்சியாளர் கம்பீரின் அணித் தேர்வு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் லார்கன் டக்கரின் 50 ரன்கள் மற்றும் காரெத் டெலானியின் 49 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. 183 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு, முதல்முறையாக டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது, மந்தமான பேட்டிங் மற்றும் தவறான வியூகங்கள் அவரது கேப்டன்ஷிப் மீது கேள்வியை எழுப்பியுள்ளன. உலகக் கோப்பையை வென்ற சூர்யகுமார் யாதவை நீக்கியதற்கு இதுதான் பலனா என ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ-ஐ சாடி வருகின்றனர்.
மேலும், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது அணி நிர்வாகத்தின் பிடிவாதம் மற்றும் பயத்தைக் காட்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 16வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்ததும், அந்த ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்ததும் தவறான முடிவாகக் கருதப்படுகிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோரின் மந்தமான பேட்டிங் அணுகுமுறையும் தோல்வியை உறுதி செய்தது.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தேவையற்ற சோதனைகளும், பிசிசிஐ தேர்வுக்குழுவின் அரசியலுமே இந்த அவமானத்திற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.