பெங்களூரு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூர தாக்குதலில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மகளே தனது காதலனுடன் சேர்ந்து ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளன. பயத்தில் தான் அனைவரையும் குத்தியதாக ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (55) – முத்துலட்சுமி (48) தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வேதா (24). இவருக்கு ஸ்வேதா தவிர சுப்ரியா (20) என்ற மற்றொரு மகளும் உள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு, ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பெற்றோர் மற்றும் தங்கை சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் சேர்ந்து தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகியோரைக் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த தந்தை சோமசுந்தரத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். தனிப்படை அமைத்து இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஸ்வேதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், 'எனது வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை. மன அழுத்தத்தில் இருந்தபோது கென்னத்தை காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குத் தெரியாமல் காதலனுடன் வாடகை வீட்டில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தேன். வீட்டிற்கு வந்த தாயைக் கொன்ற பிறகு, தங்கை சுப்ரியாவையும், பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தையையும் பயத்தில் குத்திவிட்டேன்' என்று ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைக்குப் பின் இருவரும் திருவண்ணாமலைக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு பைக் பழுதானதால், ஸ்வேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டு கென்னத் தலைமறைவாகியுள்ளார். கென்னத்தை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு புதுச்சேரி அண்ணா சாலைப் பகுதியில் பதுங்கியிருந்த கென்னத்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஸ்வேதா தனது வாக்குமூலத்தில் கென்னத் கொலை செய்யவில்லை என நாடகமாடிய நிலையில், தந்தை சோமசுந்தரம் மரண வாக்குமூலத்தில் 'கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கொலையில் கென்னத்தின் நேரடிப் பங்கு உறுதியாகியுள்ளது.