இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான 'கோல்டன் பிளேட் விருது' வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்லன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்' அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படங்களின் இயக்குநர் பீட்டர் ஜாக்சன், ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த விருதை நேரில் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.
'கோல்டன் பிளேட் விருது' என்பது கலை, அறிவியல், பொதுச் சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உத்வேகமாகத் திகழும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். இந்த விருது, ரஹ்மானின் இசைப் பயணத்திற்கும் உலகளாவிய பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறுவதன் மூலம், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமி, நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், பிரபல இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், நடிகர் சாமுவேல் எல்.ஜாக்சன் போன்ற சர்வதேச மாமேதைகளின் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்துள்ளார். இது தமிழ் இசைத்துறைக்கும் இந்தியாவிற்கும் கிடைத்த பெருமையாகும்.