தமிழக மக்களே உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது. 'எல் நினோ'வின் தாக்கத்தால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 'எல் நினோ' என்பது ஒரு பருவநிலை நிகழ்வாகும். இது சில பகுதிகளில் மழைப்பொழிவையும், வெப்பநிலையையும் மாற்றி, கடும் வறட்சியையோ அல்லது பெருமழையையோ ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இதன் காரணமாக, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 226 மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தில் அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் 'எல் நினோ'வின் தாக்கத்தால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வறண்ட சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வறட்சி ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய இந்திய மானாவரிப் பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் வறட்சி பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ள 226 மாவட்டங்களின் வேளாண்மை அதிகாரிகளுடன் இந்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.