திமுக ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசு லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கியதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் தேனியில் பள்ளி நடத்தியதால் திமுக ஆட்சியின்போது நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். லஞ்சம் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடைசி வரை அங்கீகாரம் பெறவே முடியவில்லை. தென்காசியில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்க திமுக அரசு லஞ்சம் எதிர்பார்த்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கினர். எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தற்போதைய அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். இதற்கு முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, இதை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'நான் ஒரு த.வெ.க.வின் கைக்கூலி அல்லது சங்கி அல்லது வேறு எதுவாகவும் என்னை தி.மு.க.வினர் நினைத்தால் பரவாயில்லை. தி.மு.க.வினரின் இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பணிந்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் வம்சாவழிப் பணக்காரர் இல்லை, ஏதுமில்லாமல் வளர்ந்தவன். தமிழ் வழிப் பள்ளிகளில் படித்தவன். தி.மு.க.வினரின் தாக்குதல்களால் நான் அஞ்சமாட்டேன். நான் மரணத்திற்கு அஞ்சாதவன், தி.மு.க.வுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, 'தி.மு.க.வினருக்கு சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியின்போது பள்ளிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.