கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், முறைகேடு செய்வதற்காகவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரத்துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், இந்தத் துறையின் நிதிநிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை குறித்து விரிவாக விளக்கினார்.
வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின்படி, 2001 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சாரத்துறை பெரும் நிதிப் பற்றாக்குறையை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2016-2021 காலகட்டத்தில் மட்டும் ரூ.58,534 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 74,714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 65,921 பேர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மின் வாரியத்தில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அதை நீண்ட கால ஒப்பந்தமாக மாற்றுவதன் மூலம் மாதம் ரூ.215 கோடி சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மின்சாரத்துறையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்றும், பதவி உயர்வு வழங்காமல் பணியாளர்களை ஏமாற்றியதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தற்போது பணி நியமனத்தில் எவ்வித ஊழலும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். தமிழக மின்சாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.