மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா மற்றும் மூத்த வீராங்கனை ஆலியா ரியாஸ் ஆகியோருக்கு இடையே ஹோட்டல் அறை விவகாரத்தில் பெரும் மோதல் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்வியையும் சேர்த்து தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் மூத்த வீராங்கனையான ஆலியா ரியாஸின் கணவர் அலி யூனிஸ், அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தங்குவதற்கு கேப்டன் பாத்திமா சனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேப்டனின் கட்டாயத்தின் பேரில் அவர் அறையை காலி செய்ய வேண்டியிருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆலியா ரியாஸ் மற்றும் அவரது கணவர், அணிக்கு பயிற்சி அட்டவணை இருந்த நாளன்று பயிற்சிக்கு வராமல் வெளியே சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கான அணித் தேர்வின் போது ஆலியா ரியாஸை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேப்டன் பாத்திமா சனா வலியுறுத்தினார். ஆனால், அணியின் ஆலோசகரும் அதிகாரப்பூர்வமற்ற பயிற்சியாளருமான வஹாப் ரியாஸ், ஆலியாவை விளையாட வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததோடு, ஆலியா ரியாஸும் மோசமாக விளையாடி ஏமாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் பாத்திமா சனா, 'உங்களது தவறான முடிவாலும், ஒழுங்கீனத்தாலும் தான் அணி தோற்றது' என்று வஹாப் ரியாஸை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக சாடினார். வீரர்களுக்குள் தனித்தனி குழுக்கள் அமைந்திருப்பது மற்றும் பயிற்சியாளர்களின் அறிவுரைகளை வீரர்கள் களத்தில் செயல்படுத்தாதது போன்ற உட்கட்சி பூசல்களால் பாகிஸ்தான் மகளிர் அணி சீரழிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.