மத்திய அரசு, 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'-ல் ஒரு முக்கிய திருத்தத்தைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது. குறிப்பாக, 'அந்தியோதயா அன்ன யோஜனா' (AAY) திட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதே இதன் நோக்கமாகும். தற்போது, சில குடும்பங்கள் அதிகப் பலன்களையும், வேறு சில குடும்பங்கள் குறைவான தானியத்தையும் பெறுவதால், இந்தச் சமநிலையின்மையை களைய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. இது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், குடும்ப அலகின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. இதனால், சிறிய குடும்பங்களுக்குத் தனிநபர் அதிக அளவு தானியம் கிடைத்தாலும், பெரிய குடும்பங்களில் தனிநபர் ஒருவருக்குக் கிடைக்கும் அளவு குறைகிறது. சில சமயங்களில், பெரிய குடும்பங்களுக்குக் கிடைக்கும் தானிய அளவு, முன்னுரிமைப் பிரிவினருக்குக் கிடைப்பதை விடக் குறைவாகவும் உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் வரைவு மசோதாவின்படி, 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் 7 கிலோ தானியம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறை, தானிய விநியோகத்தை சீராக்குவதுடன், சமமான வழங்கலை உறுதி செய்து மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் என அரசு நம்புகிறது. இருப்பினும், 35 கிலோ என்ற உச்சவரம்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இந்தத் திருத்தம் சட்டமானால், அது 'தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2026' என்று அழைக்கப்படும். இது நடைமுறைக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளும் கருத்துகளும் கோரப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஜூலை 13, 2026 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.