சென்னையில் பள்ளி வளாகங்களுக்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தவெகவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருத்தப்படுகின்றனர். சென்னையில் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருந்தி கொண்டிருக்கிறார்கள். திமுகவின் இந்த தோல்வி தற்காலிகமானதுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத யாரும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது. தலைமை ஆசிரியரின் அனுமதி பெறாமல் இனிப்பு உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க விரும்பினால் கூட, தலைமை ஆசிரியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்' என்றும் மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில், த.வெ.க.வைச் சேர்ந்த சிலர் மாநகராட்சிப் பள்ளியில் கட்சித் துண்டு அணிந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேயரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் மூலம் பள்ளி வளாகங்களில் அரசியல் தலையீடுகள் தடுக்கப்பட்டு, மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் கட்சிகளின் ஈடுபாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பதே மேயரின் நோக்கமாகும்.