சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜென் Z திமுக (GEN Z DMK) நிர்வாகி அன்பானந்தம் வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஜென் Z திமுக கூட்டம், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே போடம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜென் Z திமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி அன்பானந்தம் என்பவரை நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் போலீசார் கைது செய்ய முயற்சித்துள்ளனர். அவரது வீட்டில் புகுந்த போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அன்பானந்தம் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறிய போதிலும், போலீசார் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நள்ளிரவில் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை மற்றும் கைது முயற்சி தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அன்பானந்தத்தை நள்ளிரவில் இவ்வளவு அவசரமாக போலீசார் தேடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.