முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்து, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை ரத்து செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளின் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்டிருந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் நிதி இழப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய திட்டத்தின்படி, ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே மின்சார பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும். அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மின்சார பஸ்களை வாங்குவதற்கும், கண்டக்டர்களை நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதி இல்லை. எனவே, தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்க ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வாரத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளையும் த.வெ.க. அரசு அதிரடியாக ரத்து செய்தது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும் கோவில்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொடர் நடவடிக்கைகள், அரசு நிதியை திறம்பட பயன்படுத்துவதையும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.