இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதி ரூ.20,000 கோடி என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்த தவெக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உண்டியல் வருவாய், சேவைகள், சொத்து வாடகை, குத்தகை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சிக் காலத்தில், கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், கார்பார்க்கிங், அன்னதானக் கூடங்கள் போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.20,000 கோடி வரை செலவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பல கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை என்றும், சுகாதார வளாகம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது. அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடாமல், தேவையில்லாத கட்டுமானப் பணிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல கோயில்களில் வருவாய் இல்லாத நிலையிலும், கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது. கோயில்களின் நிதி இவ்வாறு தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் முடிவில், கோயில்களின் விதிகள் எந்த அளவுக்கு மீறப்பட்டுள்ளன, நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது, ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா, கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். கோயில் நிதிகள் முறைகேடாகச் செலவிடப்பட்டது தெரியவந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.