சொன்னதை செய்து காட்டிய முதல்வர் விஜய்..! ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தை மற்றும் தாயை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம், குழந்தை பராமரிப்பு, அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு, முதல்வர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழர் பாரம்பரியத்தில் ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபின்படி, தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மகத்தான திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயனடைவார்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.