திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டும், கோவிலின் வருவாய் குறைவை ஈடுசெய்யும் வகையிலும், நிர்வாக நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கரத உலா திட்டத்திற்கான கட்டணம் 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், அதற்கான நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சண்முகார்ச்சனை கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. மூலவர் அபிஷேகத்திற்கு, தற்போது 1,500 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், இனி இரண்டு நபர்களுக்கு 10,000 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்பது கால பூஜைக்குரிய கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நிரந்தர வைப்பு நிதியும் 20,000 ரூபாயிலிருந்து 90,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், விழா நாட்களில் 2,000 ரூபாயாகவும் இருந்த நிலையில், இனி அனைத்து நாட்களிலும் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
கோவிலில் வருவாய் குறைந்துள்ளதைச் சமாளிக்க இந்த கட்டண உயர்வு அவசியம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பக்தர்களிடம் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 7ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், வருவாய் குறைவை காரணம் காட்டி சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.