கேரளாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சருமான ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜார்ஜ் குரியனின் பதவிக்காலம் ஜூன் 21 அன்று முடிவடைந்தது. இதன் காரணமாக, அவர் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக தொடங்கப்பட்டதில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், கஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் குரியன் வெற்றி பெறவில்லை. இந்தத் தோல்வியின் காரணமாக, அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்க கட்சித் தலைமை மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாகவே அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினரான குரியனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் வகித்து வந்த சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது.