கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் 9 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த சிறுவன், குழந்தையின் உறவினர் என்றும், கடந்த மூன்று நாட்களாக குழந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இரவு, கோரக்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், குழந்தை தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்த சிறுவன் குழந்தையை கடத்திச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த பிறகு, சிறுவன் குழந்தையை வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் உள்ள தகரக் கொட்டகையில் விட்டுச் சென்றான். குழந்தையின் தாய் கூறுகையில், அதிகாலை 2 மணியளவில் விழித்தெழுந்தபோது குழந்தை காணாமல் போயிருந்ததை கண்டறிந்ததாகவும், இரவு முழுவதும் தேடியும் பலனளிக்கவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். சிறுவனும் குழந்தையைத் தேடுவது போல் நாடகமாடியுள்ளான்.
சனிக்கிழமை காலை, வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில், தகரக் கொட்டகையில் குழந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததை கவனித்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தைப் பார்வையிட்டும், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், குழந்தையின் தாய்மாமனான இந்த சிறுவன் மீது சந்தேகம் வலுத்தது. அவனிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்ததாகவும், குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் மொபைல் போனை ஆய்வு செய்ததில், அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களும் பார்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.