லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் நேற்றைய தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் ஒரு மென்பொருள் நிறுவனமும், ஆன்லைன் விளையாட்டு மையமும் செயல்பட்டு வந்துள்ளன. நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அந்த மாடியில் இருந்த சுமார் 30 பேர் உடனடியாக வெளியேற முயன்றனர். ஆனால், புகை மண்டலத்தால் நிலைமை மோசமடைந்தது. உயிர் பிழைப்பதற்காக சிலர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ முழுவதுமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. ஹைட்ராலிக் இயந்திரங்கள் போன்ற உபகரணங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனில் அகர்வால் கூறுகையில், '15 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயிலிருந்து தப்பிக்க கீழே குதித்த 2 சிறுவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து லக்னோ வளர்ச்சி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.