திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் மொத்தம் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சீதா (23) என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அமோனியா வாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 147 தொழிலாளர்கள், தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொழிற்சாலைகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.