உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லக்னோவில் உள்ள பூர்ணியா பகுதியில் செயல்பட்டு வந்த இந்த பயிற்சி மையத்தில், முதலில் மெதுவாகப் பரவிய தீ, பின்னர் மளமளவென கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தீ விபத்தை அறிந்த மாணவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் தவித்த மாணவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் சிக்கியவர்களில் மொத்தம் 14 மாணவர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.