சேலம் எடப்பாடி அருகே, தாய் கண்டித்ததால் மனமுடைந்த 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூலாம்பட்டி காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த சுசீலா, கணவர் வெங்கடாசலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மகன் அஜித் குமார் மற்றும் மகள் கௌசல்யா தேவி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.
கௌசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டு தேர்வில் 10 பாடங்களில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்தாமல், எப்போதும் செல்போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை கடுமையாக சாடியுள்ளார். 'இனிமேல் செல்போன் பார்க்கக் கூடாது, ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்' என்று எச்சரித்துள்ளார்.
தாயின் கண்டிப்பால் மனவேதனையடைந்த கௌசல்யா, கடந்த 15-ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டில் இருந்த விவசாய பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கௌசல்யா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.