இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். 80 மற்றும் 90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஆர்.வி. உதயகுமார், தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1988-ல் ‘உரிமை கீதம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராகவும், முக்கிய நிர்வாகியாகவும் ஆர்.கே. செல்வமணி போன்றோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட ஆர்.வி. உதயகுமார், அக்கட்சியின் கலைப் பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து, அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ‘கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள மன நிலையில் கட்சியில் தொடர விருப்பம் இல்லாததால் எனது கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில், சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில், அமைச்சர் முன்னிலையில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். இந்த விழாவில் ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர்.
திரைத்துறையில் முக்கியப் பங்காற்றிய ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் தவெக இணைப்பு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தவெகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.