தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் ஒரு கிராமுக்கு சுமார் ரூ.21,000-ஐ தாண்டும் என அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலையில் தினசரி தாறுமாறான மாற்றங்கள் காணப்படுகின்றன. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டாலர் மதிப்பு உயர்வு போன்ற பல காரணிகள் இந்த விலை மாற்றங்களுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
தற்போதைய சூழலில், கச்சா எண்ணெய் விலை குறையும் வரை தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர். உலக சந்தையில் டாலர் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், உலக நாடுகள் தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதுவும் தங்கத்தின் விலை குறைய ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு ஆசியப் போரினால் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயரக்கூடும் என ஒரு ஆய்வறிக்கை கணித்துள்ளது. உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் வெளியிட்ட கணிப்பின்படி, அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை தற்போதைய விலையை விட 40%க்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ தாண்டி, சுமார் ரூ.21,600 வரை உயரக்கூடும் என்றும், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.16 லட்சத்தை எட்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறித்த அச்சம் மற்றும் உலக அரசியல் பதற்றம் ஆகியவை தங்கத்தின் தேவையை அதிகரித்து வருகின்றன. மேலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.