நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தெற்கு ரயில்வேயால் ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சென்னை கோட்டம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், வழக்கமான வாரநாள் அட்டவணைப்படியே புறநகர் ரயில் சேவைகள் தேர்வு நாளிலும் இயக்கப்படும். அரக்கோணம் ரயில் நிலையத்தில் தற்போது பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்ட்ரல், கடற்கரை – அரக்கோணம் – திருத்தணி வழித்தடத்தில் மட்டும் புறநகர் ரயில்கள் தற்போதைய அட்டவணையின்படி இயக்கப்படும். மேலும், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்தடங்களிலும் வாரநாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேக நீட் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த உதவி மையங்கள் மூலம் ரயில்களின் விவரங்கள், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் இந்த உதவி மையங்கள், தேர்வு மையங்களுக்குச் செல்வதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.