மும்பையைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம்பிடித்த மிக இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இந்த இளம் வீரர் புதிய சூழலுக்கு எளிதாகப் பழகுவதற்காக, அவரது பெற்றோர் அவருடன் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 சுற்றுப்பயணங்களின் போது உடன் செல்ல பிசிசிஐ சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் சுமார் 800 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதன் மூலம் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் வைபவ். இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் 18 வயதைக் கடந்தவர்கள் என்பதால், இந்த சிறப்பு ஏற்பாட்டை பிசிசிஐ செய்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், 'பொதுவாக மூத்தோர் தேசிய அணிகளில் 14 அல்லது 15 வயதுடைய வீரர்கள் இடம் பெறுவதில்லை. பல தசாப்தங்களுக்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு இளம் திறமைசாலி நமக்குக் கிடைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் போது 16 அரை வயதில் தேசிய அணியில் இடம் பிடித்தார். இவ்வளவு இளம் வயது சிறுவன் மூத்த வீரர்கள் அடங்கிய அணியில் இணையும் போது, சில நடைமுறைச் சிக்கல்கள் எழுவது இயல்பு தான்' என்றார்.
தற்போது இலங்கை ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய ஏ அணியுடன் உள்ள சூர்யவன்ஷி, இதனைத் தொடர்ந்து இந்திய மூத்த அணியுடன் அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. சக வீரர்களுடன் இயல்பாகப் பழகுவதற்கும், அணியின் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கும் இந்த அனுமதி பெரிதும் உதவும். அணியின் மற்ற வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் முதிர்ந்த நபர்களாக இருப்பதால், வைபவை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் இப்போது தான் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார் அல்லது தனது இறுதிப் பள்ளி ஆண்டில் உள்ளார். எனவே, அவரது பெற்றோர் அவருடன் பயணிக்க அனுமதிப்பது சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் சொத்தாகக் கருதப்படும் இந்த இளம் வீரரை அவரது பெற்றோர் மிகச் சிறந்த முறையில் கவனித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது' என்று சைகியா விளக்கினார்.