தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், 'எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுக அரசுக்கும் த.வெ.க அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதல்வர் விஜய் இன்னும் தூக்கத்திலிருந்து எழவில்லை. எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியிலேயே அவர் இருக்கிறார். 24 மணி நேரத்தில் 12 கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன' என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி போன்ற எதற்காகவும் ஆசைப்பட்டு கட்சிக்கு வரவில்லை என்றும், சித்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் பாஜக என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கட்சியிலிருந்து பலர் வெளியே சென்றாலும், அது கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தால் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.