தமிழக பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்குவதும், தேசிய கீதத்துடன் நிறைவு செய்வதும் வழக்கம் என்றும், தேசிய கீதத்தை அவை தொடக்கத்தில் பாடக்கூடாது என்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறினார்.
தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு துரிதமாக கண்காணிக்கப்படுவதாகவும், முதல்வர் விஜய் கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். மேலும், 2-3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது அரசின் வெளிப்படையான நடவடிக்கையாகும் என்றும், இதன் மூலம் சட்டமன்ற விவாதங்களை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி நிதியை மத்திய அரசிடம் பேசிப் பெறுவோம் என்றும், சட்டப்பேரவையில் வெறுமனே கூச்சலிடாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை செயல்படுத்துவோம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். தமிழே தவெக அரசின் மூச்சு என்றும், மத்திய அரசின் வந்தே மாதரம் சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அதிகம் முன்வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். கடந்த ஆட்சியில்தான் 'வாயைத் திறங்க CM' என்ற பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.