எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் சரி செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினரின் தூண்டுதலால் சில இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதாகவும், ஆனால் அவை உடனடியாக சரிசெய்யப்படுவதாகவும் கூறினார். அடுத்த வாரம் மின்துறை சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி அமைதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பாஜக – திமுக இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது குறித்தும், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்குகளில் கோப்புகள் கையெழுத்தாகாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட பிரச்சனைகளால் குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், தேசிய கீதத்தை இருமுறை பாடியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
சட்டப்பேரவை விதிகள் குறித்து தெரிந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச வேண்டும் என்றும், ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் நாளில் முதலமைச்சர் பேசுவார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், அதை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும், முன்பு அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சம்பவங்களில் நீதிமன்றம் தலையிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.