தமிழக அரசு, அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய இடைக்கால நிவாரணத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30% வரை இடைக்கால நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காலிகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இடைக்கால நிவாரணத் திட்டமானது கடந்த 01-01-2026 முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதிய விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு இறுதி செய்யப்படும் வரை, ஊழியர்கள் தங்களின் பணி நிறைவின் போது கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் (Basic Pay) 30 விழுக்காடு (30%) அல்லது ரூ.10,000 — இதில் எது அதிகத் தொகையோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த கணக்கீட்டுத் தொகையுடன் கூடுதலாக 60% அகவிலைப்படியும் (Dearness Allowance) சேர்த்து இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் கடந்த 1-4-2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சி.பி.எஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பம் முதலே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் 'பழைய ஓய்வூதியத் திட்டத்தையே' (OPS) அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகள் மூலமாக பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
பணி நிறைவு பெற்றும் கையில் பணமின்றி தவித்து வந்த இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது பிரத்யேக அரசாணை ஒன்றை வெளியிட்டு இந்த இடைக்கால நிவாரணத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் முழுமையாக உருவாக்கப்பட்டு அமலுக்கு வரும் வரை, தற்காலிக ஏற்பாடாக அரசு ஊழியர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படும்.