தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செங்கோட்டையன், திமுக வேட்பாளர் நல்லசிவத்தை 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பிரபு 56,232 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
செங்கோட்டையனின் வேட்புமனுவில், சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதாகவும், எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டது முறையற்றது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செங்கோட்டையனின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேபோல், லால்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் லீமா ரோஸின் வெற்றியையும் எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். லீமா ரோஸ் ஏழு நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், அதிமுக துண்டு அணிந்து தேவாலயங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை தொகுதியில் 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ முத்துராஜாவின் வெற்றியையும் எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தனை அதிகமான மனுக்களை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.