தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், 'மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது' என்று கூறினார்.
மேலும், 'வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தைவிட அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும். அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி. தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி' என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.