மின்சார வாகனங்களில் இனி தைரியமாக நீண்ட தூரம் பயணிக்கலாம்! தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 498 அதிவேக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 74 முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் மொத்தம் 4,874 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய 'பி.எம். இ-டிரைவ்' திட்டத்தின் கீழ் இந்த மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி மானிய நிதியை ஒதுக்கியுள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, முதற்கட்டமாக 498 அதிவேக சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
இந்தியாவில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 'FAME' திட்டத்தைத் தொடர்ந்து தற்போது 'PM E-Drive' திட்டத்தின் கீழ் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 74 வழித்தடங்களில், 50 வழித்தடங்கள் மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளுக்காகவும், மீதமுள்ள 24 வழித்தடங்கள் கனரக மின்சார டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.503 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்த மட்டும் ரூ.34.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை – பெங்களூரு, சென்னை – திருச்சி, சென்னை – நாகர்கோவில், சென்னை – தூத்துக்குடி, பெங்களூரு – கோயம்புத்தூர், கோயம்புத்தூர் – திருச்சி மற்றும் கோயம்புத்தூர் – நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய 7 தேசிய நெடுஞ்சாலைகளில் 498 அதிவேக சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும். இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார வாகன ஓட்டிகளின் சார்ஜிங் கவலைக்கு தீர்வு கிடைக்கும். மேலும், கேரளாவிலும் 147 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதால், தென்னிந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.