எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலைச் சென்றுகொண்டிருந்த பேருந்து, வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதியில் விபத்துக்குள்ளானது. அதிக பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பல அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 31 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலத்த காற்று வீசக்கூடிய மலைப்பிரதேசத்தில் பேருந்து சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் அவசர கால ஆம்புலன்ஸ் வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், விபத்தில் காயமடைந்த பயணிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து வாகனங்களையே நம்பி காயமடைந்தவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் பற்றாக்குறையே உயிரிழப்புகள் அதிகரிக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதுபோன்ற பேருந்து விபத்துகள் எத்தியோப்பியாவில் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்நாட்டின் தெற்கே சிதமா பகுதியில் ஒரு பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 66 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. அப்போதும் இதே போன்ற மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ வசதிக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
தொடர்ந்து நிகழும் இதுபோன்ற விபத்துகள், எத்தியோப்பியாவில் சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசரகால மருத்துவ சேவைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.