1983 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான நாளாகும். அன்றைய தினம், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றி, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி போன்ற பல ஜாம்பவான்கள் உருவாகவும், கிரிக்கெட் விளையாடவும் உத்வேகம் அளித்தது. தற்போது 15 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களுக்கும் இது ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
அன்று லார்ட்ஸில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் மாற்றியமைத்தது. 10 வயது சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர், இந்த வெற்றியால் ஈர்க்கப்பட்டு, லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தூண்டப்பட்டதாக பின்னர் கூறியுள்ளார். '1983 உலகக் கோப்பை வெற்றிதான் என்னை லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தூண்டியது. அன்று அது நடக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருந்திருக்கும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். சச்சின் என்ற மாபெரும் வீரர் பிறக்க இந்த ஒரு நாள் தான் விதையாக அமைந்தது.
வெற்றி பெறுவதற்கு 50க்கு 1 என்ற மிகக் குறைந்த வாய்ப்புகளே இருந்ததாகக் கணிக்கப்பட்ட இந்திய அணி, அன்றைய காலத்தின் வலிமைமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கபில் தேவ் பின்னோக்கி ஓடிப் பிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ச், அமர்நாத்தின் ஆட்டநாயகன் ஆட்டம், மைதானத்திற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் என அன்று நடந்த நிகழ்வுகள் இந்தியாவில் ஒரு பெரும் கிரிக்கெட் புரட்சியை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் வறுமையும், அவசரநிலையின் வடுக்களும் நிறைந்திருந்த இந்தியாவிற்கு கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது நம்பிக்கைக்கான குறியீடாகவும் விளங்கியது.
குறிப்பாக, ஆங்கிலேயர்களின் அதிகார மையமாகவும், வர்க்க மற்றும் நிறவெறியின் கோட்டையாகவும் கருதப்பட்ட லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வெல்வது, நம்மை அடிமைப்படுத்தியவர்கள் மீது நாம் பெற்ற தார்மீக வெற்றியாகக் கருதப்பட்டது. 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகுதான் இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கம் உலக அரங்கில் ஓங்கத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில், லார்ட்ஸ் மைதானத்தில் 326 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. கேப்டன் சவுரவ் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றி கொண்டாடியது, 1932ல் இருந்த பயம் மற்றும் தயக்கத்திலிருந்து 2002ல் ஏற்பட்ட கம்பீரமான மாற்றத்தைக் காட்டியது. கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிய அந்த ஒரு நாள், இந்தியர்களின் நெஞ்சில் என்றும் அழியாத காவியமாக நிலைத்திருக்கும்.