தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பிறகு இந்திய இளம் வீரர் ஒருவர் இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடைசி பந்தில் எத்தனை ரன்கள் என்பது குறித்த வாக்குவாதம் காரணமாக போட்டி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், போதிய வெளிச்சமின்மை காரணமாக சூப்பர் ஓவர் நடத்துவதில் நடுவர்கள் தயக்கம் காட்டினர். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய கேப்டன் திலக் வர்மா மற்றும் பயிற்சியாளர்கள் நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக சூப்பர் ஓவர் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி, அர்ஷத் கான் வீசிய சூப்பர் ஓவரில் 18 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் இந்திய வீரர்கள் ஆட்டம் முடிந்ததாக நினைத்து வெளியேறினர். ஆனால், அது நோ-பால் என மூன்றாவது நடுவர் அறிவித்ததால், இந்தியாவுக்கு 19 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா சார்பில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே விளையாடினர். கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினாலும், கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.
ஆட்டம் முடிந்ததும், சூர்யான்ஷ் ஷெட்கே இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, 15 வயதே ஆன இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர் ஒருவரின் நெஞ்சில் பலமாகத் தள்ளி மோதலில் ஈடுபட்டார். உடனடியாக இரு அணி வீரர்களும் ஓடிவந்து அவர்களை விலக்கி சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.