2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவதற்கு அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 37 வயதான ஜடேஜா ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டில் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, மேலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். வயது ஒரு தடையாக இருப்பதோடு, அக்சர் படேல் மற்றும் புதியவரான ஹர்ஷ் துபே போன்ற பிற இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களும் போட்டியில் இருப்பதால், 2027 உலகக் கோப்பைக்கான ஜடேஜாவின் தேர்வு உறுதியாகவில்லை.
இது குறித்து ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'ஜடேஜாவை இப்போதே நிராகரிக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். தற்போதைக்கு அவர் தனது உச்சகட்ட ஃபார்மில் இல்லை என்றாலும், அவரை இப்போதே ஓரங்கட்டுவது முட்டாள்தனமாக இருக்கும். சமீபத்திய தடுமாற்றங்களுக்கு மத்தியிலும், கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு ஜடேஜா முக்கியப் பங்காற்றினார்' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 'ரோஹித்தின் தேர்வு அவரது ஃபார்மைப் பொறுத்தது. அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து வந்தால் என்ன பிரச்சனை? அடுத்த சில மாதங்கள் சோதனை காலமாகும்' என்றும் அவர் கூறினார்.