அதிமுகவில் சி.வி.சண்முகத்திற்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியது எடப்பாடி பழனிசாமிதான் என்றும், அது ஒரு பிச்சை என்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சி.வி.சண்முகம் அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினரானதும், சட்டத்துறையில் இருந்து கனிமவளத் துறையை பெற்றதும் எடப்பாடி பழனிசாமியின் தயவால்தான் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக சீட்டுக்கட்டு போல சரிந்து வருவதாக சி.வி.சண்முகம் கூறுவது பச்சை பொய் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சி.வி.சண்முகம் தட்டுத்தடுமாறிதான் வெற்றி பெற்றதாகவும், குடும்ப ஆட்சியை பற்றி பேச அவருக்கு யோக்யதை இல்லை என்றும் அவர் கூறினார். அதிமுக ஒருபோதும் மூழ்கும் கப்பல் இல்லை என்றும், மரகதம் குமரவேலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தன்னை வளர்த்த இயக்கத்தை குறை சொல்ல சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். அதிமுக, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியமைக்க முயன்றதாக சி.வி.சண்முகம் பரப்பும் தகவல் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சி.வி.சண்முகம் தொடர்ந்து இதுபோன்று பேசினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.